ஸ்ரீராமநவமி


இருபது லட்ச வருடங்களுக்கு முன் இராமன், அயோத்தி இருந்தனவா? இந்த நாள் - கோள் இருந்தனவா? இராவணன் இருந்தானா?

பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லிக் கொண்டு வருடத்திற்கு ஒருநாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாட்டம் நடத்துகின்றார்கள்.

இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒருநாள் லீவும் கொடுக்கிறார்கள்.

இராமன் பிறந்தநாள் என்று சொல்லப்படுவது இன்றைக்கு 20 லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20 லட்ச வருடத்தில் உலகத்தில் உள்ளது எல்லாம் நாசமடைவதும் - உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள் நடந்து இருக்க வேண்டும். அப்போது மனித சமுதாயம் - மனிதன் - காடு மேடு - உலக பூகோளம் - மலை - சமுத்திரம் போன்ற யாவும் அழிவும் - மாற்றமும் அடைந்துவிடும். இது யாவரும் அறிந்ததும் - புராணக் கூற்றும் - சரித்திர உண்மையும் ஆகும்.

இப்படிப்பட்ட நிலையில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்ற ஒரு ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அநேக பெண்டாட்டிகளும் இருந்தனர்; அவனுக்கு இராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் - மாதம் - தேதி - கிழமை - நாள் - கோள் - இன்ன இன்னது என்பதும் அவை மாத்திரம் அல்லாமல் அந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிட நாடு - பாண்டிய நாடு - இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

20 லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறையாமல் இருக்க முடியுமா? பார்ப்பனர்கள் தங்கள் சுக வாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் - செய்வார்கள் என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் - அறிவாளிகள், பூகோளம் - விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள்? என்பதும் நமக்குப் புரியவில்லை.

இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள்? என்பதும் அதிசயமாக உள்ளது.

வடநாட்டில் இராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தையுப் பார்ப்பனரும், வடநாட்டாரும் செய்தால் - அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புத்தி வரும்படியான காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது?

ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், கட்டாயமாகச் சிந்தித்து, நல்லபடி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரி என்றும், அவசியம் என்று தோன்றினால், இராவணன் படத்தை, உருவத்தைக் கொளுத்தினதற்குப் பதில் என்று இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.


நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர்களுக்கு இருப்பதால் இதுபோன்ற (பார்ப்பனப்) பிரச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. இந்தப்படியான பித்தலாட்டங் களில் ஏமாறாமலும், நம்மை இழிவுபடுத்தும் இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும்தான் நாம் இராமன் படத்தைக் கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்க வேண்டும்.

நூல் : இந்துமதப் பண்டிகைகள்
ஆசிரியர் : தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

அய்யப்பன் கதை

‘சொர்க்கவாசல்’ மகிமை

கந்த சஷ்டி