“சங்கராந்தி!”



பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும், உழைப்பின் உயர்வை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து, அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு புது மரியாதையை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் அதையும் விட்டுவைத்தார்களா இந்தப் பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம்? அதனிலும் மதச் சேற்றைப் போட்டுக் குழப்பி, ‘சங்கராந்திஎன்றும் பெயரிட்டு, தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர்.

அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள்:

சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம். இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தக்ஷிணாயனம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் °வரானுக்கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப் பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ்செய்திருந்தபடியால், அப்பசுக்களைக் கொண்டு, அப்புலியுருக் கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.

இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தை மாதம் முதலில் அறுத்த, முதற் பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ண மூர்த்தி அவதரித்தபின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டடைள இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கிராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண் பொங்கல் எனவும் கூறுவர்.”

இவ்வாறு அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் புராணங்களின் பேரால் புளுகித் தள்ளியுள்ளனர் இந்தப் பார்ப்பனர்கள். மழை பொழிவதாம் - அதை மலையைக் குடையாக்கித் தடுப்பதாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம் - பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்! தமிழர்களே அதை நம்பப் போகிறீர்களா?

நூல் : இந்துமதப் பண்டிகைகள் 
ஆசிரியர் : தந்தை பெரியார்



Comments

Popular posts from this blog

அய்யப்பன் கதை

‘சொர்க்கவாசல்’ மகிமை

தீபாவளி